Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் திருநகர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது72) நெசவாளர். இவரது மனைவி ரத்னா (70). இவர்களுக்கு 3 மகள்கள் பிறந்தனர். அவர்கள் 3 பேரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர்.இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாகவும், தங்களை கவனிக்க ஆளில்லை என்ற கவலையிலும் இருந்து வந்தனர். இன்று நீண்ட நேரமாகியும் கிருஷ்ணராஜ் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கதவை தட்டி உள்ளனர்.
ஆனால் பதில் எதுவும் வரவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது கிருஷ்ணராஜ், ரத்னா வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வயது முதிர்வு காரணமாகவும், தங்களை கவனிக்க ஆளில்லை என்ற கவலையிலும் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான தம்பதி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.